Wednesday, September 01, 2004

கவிதை : (இரட்டை நாக்கு) உலகம்

(இரட்டை நாக்கு) உலகம்



உன்னைப் பார்த்து உலகம் குரைக்கும்

தன்னம்பிக்கை தளரவிடாதே

இரட்டைப்பேச்சு பேசும் உலகம்

மிரட்டும் தம்பி மிரண்டு விடாதே



ஒவ்வொரு வாயிலும் ஒற்றை நாக்கு

உலகின் வாயில் இரட்டை நாக்கு

எனக்கு நேர்ந்த இழிமொழி எல்லம்

உனக்குச் சொல்கிறேன் உள்ளத்தில் எழுது



இன்னிசைத் தமிழை எளிமை செய்தேன்

இலக்கியம் இல்லை லேகியம் என்றது

திரைப்பாட்டுக்குள் செழுந்தமிழ் செய்தேன்

பரிமே லழகரை வரச்சொல் என்றது



குறுந்தொகை கம்பன் கொட்டி முழங்கினேன்

குண்டுச்சட்டியில் குதிரை என்றது

எலியட் நெருடா எல்லம் சொன்னேன்

திறமை எல்லாம் திருடிய தென்றது



எளிய தோற்றமே இயல்பென இருந்தேன்

வடுக பட்டி வ்ழியுது என்றது

அழகாய் நானும் ஆடைகள் கொண்டேன்

கழுதைக் கெதற்குக் கண்மை என்றது



மேடையில் கால்மேல் காலிட் டமர்ந்தேன்

படித்த திமிர் பணிவில்லை என்றது

மூத்தவர் வந்தந்தும் முதலில் எழுந்தேன்

கவிஞன் நல்ல 'காக்கா' என்றது



உயர்ந்தோர் பெருமை உவந்து புகழ்ந்தேன்

காதில் பூ வைக்கிறான் கவனம் என்றது

விரல்நகத் தளவு வீமர்சனம் செய்தேன்

அரிவாள் எடுக்கிறான் ஆபத்து என்றது



மற்றவர் சூழ்ச்சியால் மண்ணில் வீழ்ந்தேன்

புத்தி கொழுத்தவன் புதைந்தான் என்றது

மூச்சுப் பிடித்து முட்டி முளைத்தேன்

தந்திரக் காரன் தள்ளிநில் என்றது



பகையை கண்டு பைய நகர்ந்தேன்

பயந்துவிட்டான் பாவம் என்றது

மோதி மிதித்து முகத்தில் உமிழ்ந்தேன்

விளங்கிவிட்டதா மிருகம் என்றது



பணத்தில் பொருளில் பற்றற் றிருந்தேன்

வறுமையின் விந்தில் பிறந்தவன் என்றது

என்னைத் தேய்த்து மண்டபம் கட்டினேன்

புலவன் இல்லை பூர்ஷ்வா என்றது



கயவர் கேட்டால் காசு மறுத்தேன்

கறக்க முடியா கஞ்சன் என்றது

உண்மை இருந்தால் உறுபொருள் கொடுத்தேன்

உதறித் திரியும் ஊதாரி என்றது



மங்கைய ரிடையே மெளனம் காத்தேன்

கவிஞன் என்ற கர்வம் என்றது

பெண்கள் சிலருடன் பேசத் தொடங்கினேன்

கண்களைக் கவனி காமம் என்றது



விருதுகள் கழுத்தில் வீழக்கண்டேன்

குருட்டு அதிர்ஷ்டம் கூடிய தென்றது

மீண்டும் மீண்டும் விருதுகள் கொண்டேன்

டெல்லியில் யாரையோ தெரியும் என்றது



திசைகள் தோறும் தேதி கொடுத்தேன்

ஐயோ புகழுக் கலைகிறான் என்றது

நேரக் குறைவு நிறுத்திக் கொண்டேன்

கணக்குப் பார்க்கிறான் கவிஞன் என்றது



அப்படி இருந்தால் அதுவும் தப்பு

இப்படி இருந்தால் இதுவும் தப்பு

கத்தும் நாய்க்குக் காரணம் வேண்டாம்

தன் நிழல் பார்த்துத் தானே குரைக்கும்



உலகின் வாயைத் தைத்திடு; அல்லது

இரண்டு செவிகளை இறுக்கி மூடிடு

உலகின் வாயைத் தைப்பது கடினம்

உனது செவிகள் மூடுதல் சுலபம்



- நன்றி: வைரமுத்து (தமிழுக்கு நிறம் உண்டு)